பட்டுக்கோட்டையில் மார்ச் 18 -ல் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது

Update: 2023-03-09 13:22 GMT

பைல் படம்

தஞ்சாவூர்  மாவட்டம், பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தலைமையில் இன்று (09.03.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 18.03.2023 சனிக்கிழமை அன்று பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8:30 மணி முதல் பிற்பகல் 3,00 மணி வரை நடைபெற உள்ளது. அதன் தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த வேலை வாய்ப்பு முகாம் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதியைச்சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு உள்ளிட்ட முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை நகரங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர், இம்முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ கல்வி தகுதிகளுக்குரிய வேலை நாடுவோருக்கு 1000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளனர். இம்முகாமில் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆள்சேர்ப்பும் நடைபெறுகிறது. மேலும், சுயத்தொழில் தொடங்குவதற்கு உரிய வழிகாட்டுதல் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள். ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும். மேலும், பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த நிறுவனங்கள் கலந்துக கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.  பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து முகாம் நடைபெறும் கல்லூரிக்கு இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04362-237037, 9442557037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் சே.ரமேஷ் குமார், வட்டாட்சியர்  ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  சாமிநாதன், கோவிந்தராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News