6 வருஷமா கோமாவில் ஸ்டாலின்.. தீர்ப்பாகியும் வராத பணம்; காப்பாற்ற போராடும் பெற்றோர்

உறுப்புகள் செயலிழந்து ஆறு ஆண்டுகளாய் காேமாவில் உள்ள மகனை காப்பாற்ற பெற்றோர் உதவி கரம் நீட்ட அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-08-09 10:45 GMT

காேமா நிலையில் உள்ள மாணவன் ஸ்டாலின்.

தஞ்சாவூர் அருகே பொட்டுவாச்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் சேவியர் (57) லாரி டிரைவர். இவரது மனைவி லாரன்ஸ் மேரி. இவர்களுக்கு சுபா என்ற மகள், அலெக்சாண்டர், ஸ்டாலின் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் ஸ்டாலின் (23),. இவர் திருச்சியில் கல்லுாரி ஒன்றில் ஐ.டி.ஐ.,படித்து வந்தார். கல்லுாரிக்கு வீட்டில் இருந்து சைக்கிளில் சென்று தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தினமும் ரயிலில் சென்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 2015 செப்,4ம் தேதி வழக்கம் போல, கல்லுாரி செல்ல சைக்கிளிலில் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துக்கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்றார். தொடர்ந்து அவருக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. கடந்த 2016ம் ஆண்டு தஞ்சாவூர் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2019ம் ஆண்டு 30 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்ற தீர்ப்பை இரண்டு ஆண்டுகள் கழித்து வழக்கறிஞர், 30 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என கூறி, பணத்தை செலுத்தினாலும், 30 லட்சம் வருவது சந்தேகம் என அலட்சியமாக தெரிவித்தார். இதனால் அந்த இன்சூரன்ஸ் பணம் கிடைவில்லை. நண்பர்கள், உறவினர் மூலமாக இதுவரை 18 லட்சம் வரை மருத்துவ செலவு செய்தும், உடலில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதை தொடர்ந்து, பெற்றோர்கள் தரப்பில், கடந்த சில ஆண்டாக மகனுக்கு மருத்துவ உதவி வேண்டி, பல முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இது குறித்து சேவியர் கூறுகையில், மகன் ஸ்டாலினுக்கு, விபத்து ஏற்பட்ட நாளில் இருந்து பல இடங்களில் சிகிச்சை அளித்து விட்டோம். தற்போது பிசியோதெரபி ஒருவர் வீட்டிற்கு வந்து பார்த்து விட்டு சிகிச்சை அளித்து செல்கிறார். அவருக்கு மாதம் 12 ஆயிரம் ரூபாயும், அவர் கொடுக்கும் மருந்து ஒன்றிக்கு மாதம் 4,500 ரூபாய் செலவாகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாததால் அதற்கு சிரமமாகி விட்டது.

கோமாவில் இருக்கும் ஸ்டாலின் மருத்துவ செலவிற்கு, எனது மூத்த மகன் கல்லூரிப் படிப்பை விட்டு விட்டு, தற்போது கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

வரும் காலத்தில் மகன் ஸ்டாலினுக்கு மருத்துவ செலவு செய்யமுடியாத சூழலில் உள்ளோம். எனவே, அரசு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். முறையாக விபத்து தொடர்பான வழக்கை அரசு சார்பில் நடத்தி இழப்பீடு தொகையை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

Similar News