திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் கும்பகோணம் ரயில் நிலையத்தில் ஆய்வு

தஞ்சை முதல் விழுப்புரம் வரை மயிலாடுதுறை வழியாக இருவழிப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை

Update: 2021-08-28 15:29 GMT

திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளராக புதியதாக பொறுப்பேற்றுள்ள மணீஷ் அகர்வால் கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்

திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளராக புதியதாக பொறுப்பேற்றுள்ள மணீஷ் அகர்வால் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  திருச்சி கோட்ட ரயில்வே மேலாளராக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற பின்னர்,  முதல் கட்டமாக, திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட முக்கியமான ரயில் பாதைகள், ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முக்கியமாக ரயில் பாதைகளில் உள்ள தடங்கல்கள், ரயில் நிலையங்களில் உள்ள தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இயங்கி வந்த ரெயில்கள் படிப்படியாக மீண்டும் இயக்கப்படும்.  கொரோனா பரவல் நிலையைப் பொறுத்து வருங்காலங்களில் ரயில்களின் இயக்கம் மாற்றி அமைக்கப்படும். 

கும்பகோணம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது,  இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ரயில் உபயோகிப்பாளர்கள் பல்வேறு ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் தெரிவித்துள்ளனர். இவை  பரிசீலனை செய்து  நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தஞ்சை முதல் விழுப்புரம் வரை மயிலாடுதுறை வழியாக இருவழிப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின்னர், இரு வழிப்பாதை திட்டம் தொடங்கப்படும் என்றார் அவர் .

ஆய்வின்போது, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம், தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் சங்க செயலாளர் ஏ. கிரி, இணைச்செயலாளர் சரவணன் நடராஜ்குமார் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்  அந்த மனுவில்,  கொரோன  நோய்த் தொற்றின்  தாக்கம் தற்போது வெகுவாக குறைந்திருப்பதால்,  மயிலாடுதுறை-திருச்சி இடையே இயக்கப்பட்ட அனைத்து சாதாரண மற்றும் விரைவு ரெயில்களை மீண்டும் உடனடியாக இயக்க வேண்டும்.

திருச்சி ரெயில்வே கோட்டத்தில், குறிப்பாக மெயின் லயன் பாதையில் அதிக அளவில் இயக்கப்படும் பாசஞ்சர் மற்றும் டெமு ரெயில்களை மின்தொடர் வண்டிகளாக மாற்றவும், கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையில் மின்தொடர் வண்டிகளை பராமரிக்க பணிமனை அமைக்கவும் தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கும்பகோணம் ரெயில் நிலையத்தில் 2 மற்றும் 3-ம் நடைமேடை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

முன்னதாக கும்பகோணம் வந்த திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளருக்கு, தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆய்வில், கோட்ட முதுநிலை இயக்க மேலாளர் ஹரிகுமார் மற்றும் கோட்ட முதுநிலை வணிக மேலாளர்  செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News