குற்றாலத்தில் குளிக்க அனுமதிக்க கேட்டு, ஆட்சியரிடம் மனு

குற்றாலத்தில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2024-05-23 13:16 GMT

வியாபாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்ற போது எடுத்த படம்

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் வியாபாரிகள் சங்க தலைவர் காவையா தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷேரை அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:

குற்றாலத்தில் சாரல் சீஸன் காலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து அருவிகளில் வெள்ளம் அதிகமாக வரும்போது பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க காவல்துறை மூலம் தடை விதிக்கப்படும். பின்னர் வெள்ளம் குறைந்த பின்னர் மீண்டும் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

சமீபத்தில் வானிலை ஆய்வு மையம் தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது பின்னர் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது இந்த நிலையில் குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்த போதிலும் குளிக்க அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் கடந்த 6 நாட்களாக அறிவித்துள்ளது.

இதனால் அருவியில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்

மேலும் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகையை நம்பி கடை நடத்தும் குத்தகைதாரர்கள், விடுதி உரிமையாளர்களின் வாழ்வாராதம் பாதிக்கப்படுவதாகவும் இதேபோல் ஆட்டோ ஓட்டுநர்கள் சுற்றுலாப்பயணிகள் வருகையை நம்பி 200-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

அதேபோல கடந்த காலங்களில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்ட போது 100 மீட்டர் தொலைவில் தடுப்புகள் அமைத்து, அருவியை பார்க்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது அருவிக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் வாகனங்களை நிறுத்தி, சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

இதனால் சுற்றுலாப் பயணிகளை நம்பி தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது எனவே முன்பு இருந்த நடைமுறைகளை பின்பற்ற ஆவணம் செய்ய வேண்டும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களில் மழை பெய்துவருகின்றது அதேபோல தென்காசி மாவட்டத்திற்கும் அதிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மழையின் அளவு குறைந்த பின்னர் அருகில் குளிப்பதற்கு இன்னும் ஒரு இரு நாட்களில் அனுமதி வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

Similar News