கோவில் இடம் ஆக்கிரப்பு; டவர் மீது ஏறி பூசாரி தற்கொலை மிரட்டல்
விராலிமலை அருகே கோயில் இடம் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து கோயில் பூஜாரி செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
டவர் மீது ஏறிய பூசாரியை மீட்கும் போலீசார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் பொத்தபட்டியில் அம்மன் கோயில் அருகில் சுமார் 15 சென்ட் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த காலியிடத்தை அப்பகுதி மக்கள் கோவில் திருவிழாவிற்கு பயன்படுத்தி வந்தனர்.
இதனிடையே, அதே ஊரை சேர்ந்த சுதாகர் (நகைகடை உரிமையாளர்) என்பவர் சமந்தபட்ட இடத்தை ஆக்கிரமித்துள்ளார். இதுகுறித்து கோவில் பூசாரி ராசு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆக்கிரமிப்பை அகற்றி தரக்கோரி வருவாய் துறை, போலீசாரிடம் புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதாகர் என்பவர் ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் இரும்பு பைப், ஆசி பெட்டாஸ் சீட்டுகளை கொண்டு முற்றிலும் தடுப்புகளை அமைத்து கொட்டகை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவில் பூசாரி ராசு நேற்று முன்தினம் மீண்டும் வருவாய்துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.
அப்போது வருவாய் துறை அதிகாரிகள் கோவில் பூசாரி ராசுவை திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பூசாரி ராசு இன்று காலை கொடும்பாலூரில் உள்ள தனியார் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற வருவாய் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டல் விடுத்தார்.
தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த வருவாய் துறையினர் , போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள்பூசாரி ராசுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் தாலுக்கா அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர் கீழே இறங்கி வந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடந்த போது திடீரென்று பூசாரி தனது குடும்பத்தினருடன் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது இதைத் தொடர்ந்து அவர்களை காப்பாற்றி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இது குறித்து பேச்சுவார்த்தை மீண்டும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து விட்டுச் சென்றனர்.