மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று துவக்கி வைத்தார்.

Update: 2021-08-05 10:00 GMT

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வி.கோட்டையூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, தலைமையில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்து,  கூறுகையில்  புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமயம் வட்டாரம், வி.கோட்டையூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் வரும் முன் காப்போம் என்ற திட்டம்  ஒவ்வொரு ஊராட்சியிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

தற்பொழுது அதைவிட கூடுதலாக  மக்களை தேடி முகாம்களை அனுப்புகின்ற பணியை செயல்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டம் தமிழகத்தில் இன்று துவங்கப்பட்டுள்ளது. தற்பொழுது இல்லங்கள் தோறும் நேரடியாக சென்ற மருத்துவ சிகிச்சை அளிப்பதால் பொதுமக்கள் மிகுந்த பயன் பெறுவார்கள். 

மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தின் பிறபகுதிகளுக்கும் படிப்படியாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவே இத்திட்டத்தை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத் துணை இயக்குநர் டாக்டர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அழகு(எ)சிதம்பரம், வளர்மதி, ஊராட்சிமன்றத் தலைவர் ராமதிலகம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News