பொன்னமராவதியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவமுகாம் துவக்கி வைப்பு

பொன்னமராவதியில், வருமுன் காப்போம் திட்டம் மற்றும் மருத்துவமுகாமை, அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.

Update: 2021-10-12 07:50 GMT

பொன்னமராவதியில், வரும்முன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி. 

புதுக்கோட்டைமாவட்டம், பொன்னமராவதி லயன்ஸ் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில், "கலைஞரின் வருமுன் காப்போம்" திட்டம்  சிறப்பு மருத்துவமுகாமை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, தலைமை வகித்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:

வருமுன் காப்போம் திட்டம் என்பது, ஏழை எளிய மக்களுக்கு ஏற்படும் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து, உயர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கியது. இதன்மூலம் மக்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் வருமுன் காப்போம் திட்டத்தை  துவக்கி வைக்க,  முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள13 ஊராட்சி ஒன்றியங்களில்,  தலா 3 முகாம்கள் வீதம் 39 மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது.  குழந்தை நலம், பல் மருத்துவம், கண், காது, மூக்கு,தொண்டை, இருதய நோய் சிகிச்சை, நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு, புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மருத்துவர்கள் பங்கேற்று, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனர். இந்த மருத்துவ முகாமை, பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அர்ஜுன்குமார், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) மருத்துவர் இராமு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூபதி, வீடு கட்டும் கூட்டுறவு சங்க இயக்குநர் அழகப்பன், வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News