பொன்னமராவதி அருகே சாலையில் கிடந்த செல்போனை போலீசில் ஒப்படைத்த 4 ஆம் வகுப்பு மாணவன்
பொன்னமராவதி அருகே சாலையில் கிடந்த செல்போனை போலீசில் ஒப்படைத்த 4 ஆம் வகுப்பு மாணவனுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.;
சாலையில் கிடந்த செல்போனை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சிறுவனை பாராட்டும் காவல் அதிகாரி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியபட்டி ஊராட்சி ஜெ.ஜெ. நகர் சாலையில் இரவு அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளையராஜாவின் மகன் பிரகாஷ்ராஜ் சாலையில் செல்போன் கிடப்பதை பார்த்துள்ளார். எதிரே வந்த லாரியை வழிமறித்து செல்போன் உடையாத நிலையில் எடுத்துள்ளார்.
மேலும் சாலையில் கிடந்த செல்போனை உரியவரிடம் ஒப்படைக்க நினைத்த சிறுவன் அருகில் இருந்த பொன்னமராவதி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் தனபாலன் வசம் ஒப்படைத்துள்ளனர்.
நான்காம் வகுப்பு படிக்கும் பிரகாஷ்ராஜின் இந்த செயலை கண்டு வியந்த பொன்னமராவதி காவல் துணைக்கண்காணிப்பாளர் செங்கமலக் கண்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் தனபாலன் உள்ளிட்ட சக காவலர்கள் சிறுவனை பாராட்டியுள்ளனர்.
மேலும் சிறுவன் ஒப்படைத்த செல்போனை தவறவிட்ட நெற்குப்பை அரசுப் பள்ளியில் பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.