புதுக்கோட்டை அருகே கொத்தமங்கலத்தில் நடிகர் விவேக்கிற்கு இளைஞர்கள் அஞ்சலி

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் நடிகர் விவேக் மறைவிற்கு இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தினர்

Update: 2021-04-17 10:45 GMT

கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலுக்கு பின்பாக புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லையோர கிராமங்களில் உள்ள இளைஞர்கள் அமைப்பினர் தொடர்ந்து மரக்கன்றுகளை வைத்து இயற்கையை பாதுகாக்கவும்,நீர்நிலைகளை தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த இளைஞர்களின் முயற்சிக்கு நடிகர் விவேக் ஏற்கனவே தனது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்திருந்திருந்தார்.அவர் கடந்த ஆண்டு கொத்தமங்கலம் கிராமத்திற்கு வருகை தந்து மரக்கன்று நடவு செய்து பராமரித்து வரும் இளைஞர்களை பாராட்டுவதாக இருந்த நிலையில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பால் அவர் வர முடியாமல் போனது.

இந்நிலையில் நடிகர் விவேக் திடீரென இன்று காலை உயிரிழந்த செய்தி கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினரின் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.இதேபோல் சேந்தன்குடி, கீரமங்கலம், மறமடக்கி, அனவயல், குலமங்கலம் உள்ளிட்ட பகுதியில் நீர்நிலைகளை தூர்வாரி பசுமையைப் பாதுகாத்து வரும் இளைஞர்கள் மத்தியிலும் நடிகர் விவேக்கின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விவேக்கின் உயிரிழப்பிற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் அவரின் லட்சியத்தை நிறைவேற்றும் நோக்கிலும் கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மரக்கன்றுகளை நடவு செய்து அவரது நினைவை போற்றினர்.

Tags:    

Similar News