நள்ளிரவில் இலவச வேட்டி சேலைகளை கடத்த முயற்சி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நள்ளிரவில் அரசு இலவச வேஷ்டி சேலைகள் கடத்த முயன்ற நபர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2021-02-10 05:35 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக குடோனில் இலவச வேட்டி சேலைகளை குடோன் இருப்பு வைத்திருந்தனர். இந்த குடோனை சந்தேகத்துக்கு இடமான வகையில் நள்ளிரவில் திறந்து வேஷ்டி சேலைகளை, மினி லோடு ஆட்டோ வருவாய்த்துறை ஊழியர்கள் துணையுடன் சிலர் நள்ளிரவு ஆட்டோவில் ஏற்றுவதாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற ஆலங்குடி காவல்துறையினர் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்ததுடன், வேட்டி சேலைகளை ஏற்றிக்கொண்டிருந்த வேங்கிடகுளம் நந்தவனம் கீழத்தெருவை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (27), வல்லத் திராக்கோட்டை காடையன் தோப்பைச் சேர்ந்த சிவமணி(28) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலவச வேட்டி சேலைகளை லோடு ஆட்டோவில் ஏற்றியவர்கள் கொள்ளைக்காரர்களா அல்லது அரசு அதிகாரிகள் யாராவது முறைகேடுகளில் ஈடுபட முயற்சி செய்து, அரசு ஊழியர்கள் அழைத்து வந்த கூலித்தொழிலாளர்களா? என்பது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News