முதுமலை வனப்பகுதியில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம்

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல்படி வருகிற 22ம் தேதி வரை 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர்

Update: 2023-11-16 11:46 GMT

வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர்

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்து உள்ளது. இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கடமான்கள், புள்ளி மான்கள், பன்றிகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை பருவமழைக்கு முன்பாகவும் அதன்பிறகும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி நடப்பாண்டு க்கான பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வன ஊழியர்களுக்கு தெப்பகாடு வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு வனவிலங்குகளை கணக்கெடுப்பதற்காக பிரத்யேக கருவிகளும் வழங்கப்பட்டன.

முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று காலை தொடங்கியது. அவர்கள் முதுமலை காப்பக பகுதிகளுக்கு சென்று வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்களுக்கு உயர்அதிகாரிகள் வனவிலங்குகள் கணக்கெடுப்பு குறித்து முக்கிய அறிவுரைகளை வழங்கினர்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் 321 சதுர கி.மீ பரப்பளவில் உள்மண்ட லம் அமைந்து உள்ளது. இங்கு தெப்பக்காடு, கார்குடி, முதுமலை, நெலாக்கோட்டை மற்றும் மசினகுடி ஆகிய 5 வனச்சரகங்கள் இடம்பெற்று உள்ளன.

மேற்கண்ட பகுதிகளில் தற்போது பருவமழைக்கு பிந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்படி கணக்கெடுப்பு பணிகளை நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இன்று தொடங்கிய பணியானது வருகிற 22ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த பணியில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News