வேதாரண்யம் அருகே திமிங்கலத்தின் அம்பர் கிரீஸ் விற்க முயன்ற இருவர் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே திமிங்கலத்தின் அரியவகை அம்பர்கிரீஸ் விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-14 07:52 GMT

வேதாரண்யம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கலத்தின் அம்பர் கிரீஸ்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாலகுரு, ஆனந்த் ஆகிய இருவரும் கடற்கரை அருகே திமிங்கலத்தின் அம்பர் கிரீஸ் கண்டெடுத்துள்ளனர். இந்த அரியவகை அம்பர் கிரீஸ்சை வனத்துறையினரிடம் அவர்கள் ஒப்படைக்காமல் அதனை வீட்டினுள் பதுக்கி வைத்து விற்பனைக்கு முயன்றுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளப்பள்ளம் அருகே வியாபாரியை வரவழைத்து அம்பர்கிரீஸை விற்க இருப்பதாக நாகை கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்ற புலனாய்வு துறை காவல் துணை கண்காணிப்பாளர் சிவசங்கர் தலைமையில் சென்ற கியூ பிரிவு போலீசார் திமிங்கலத்தின் அம்பர்கிரீஸை விற்க முயன்ற வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த இருவரையும் சுற்றிவளைத்தனர். அப்போது அவர்களின் பையிலிருந்து சுமார் 2 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் அரியவகை அம்பர்கிரீஸ் இருப்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட ஆனந்த் மற்றும் பாலகுரு.

இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் சட்டவிரோதமாக அம்பர் கிரீஸ்சை வியாபாரியிடம் விற்க முயன்ற வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவரையும் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள நாகை கியூ பிரிவு போலீசார் தப்பி ஓடிய வியாபாரியையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடல்வாழ்  உயிரினமான திமிங்கலத்தின் உமிழ்நீரான அம்பர்கிரீஸ் என்பது, வாசனை திரவியங்களுக்கும், மதுபானங்களுக்கும், மருத்துவத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News