நாகை அருகே 13 ஐம்பொன்சிலைகள், பூஜை பொருட்கள் பூமியில் இருந்து மீட்பு

நாகை அருகே பூமிக்கு அடியில் இருந்து தோண்டத் தோண்ட 13 ஐம்பொன் சிலைகள் மற்றும் பூஜைபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

Update: 2021-09-26 13:24 GMT
சிலை தோண்டி எடுக்கப்பட்ட இடத்தில் ஏராளமானவர்கள் கூடி நின்றனர்.

நாகை மாவட்டம் தேவூரில் அமைந்துள்ளது தேவபுரீஸ்வரர் கோவில். இந்த குலோத்துங்க சோழர் கால மாடகோவிலில் திருப்பணிக்காக புனரமைப்பு பணிகள்  நடைபெற்று வருகிறது. கோவிலில் உள்ள நவக்கிரக பீடத்தின் அருகே கான்கிரீட் அமைக்கும் பணியின் பொழுது பல ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன இதையடுத்து தொழிலாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் சுவாமி சிலைகளை அதே இடத்தில் வைத்துவிட்டு காங்கிரீட் பணியை தொடர்ந்தனர்

இது குறித்து கிராம மக்களுக்கு தெரியவரவே அவர்கள் கோவில் திருப்பணியை நிறுத்தி வைத்துவிட்டு, உடனடியாக கீழ்வேளூர் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்று தேவபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்த தாசில்தார் மாரிமுத்து சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் சிலைகள் இருந்த இடத்தில் தோண்ட துவங்கினார்கள்.

அப்போது பூமிக்கு அடியில் இருந்து தோண்டத் தோண்ட ஐம்பொன் அம்பாள் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கிடைத்தன. இதில் 4 அடியில் இருந்து இரண்டு அடி வரை உள்ள 13 அம்பாள் சிலைகளும் 1 திருவாச்சியுடன் அமைந்துள்ள பிரதோஷ நாயனார் சிலைகளும் மற்றும் சங்கு சூலம் உள்ளிட்ட 10,க்கும் மேற்பட்ட மொத்தம் 35 க்கும் மேற்பட்ட ஐம்பொன் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்.

தோண்டத் தோண்ட ஐம்பொன் சிலைகளும் ஐம்பொன் பூஜை பொருட்களும் ஒவ்வொன்றாக பூமிக்கு அடியில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டன. சுவாமி சிலைகள் புதைந்துள்ள இடங்களில் தோண்டத் தோண்ட பல்வேறு ஐம்பொன்னால் ஆன சுவாமி சிலைகளும் பூஜை பொருட்களும் கிடைத்து வருவதால் அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் தொடர்ந்து சுவாமி சிலைகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பூமிக்கு அடியில் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அறிந்த தேவூர் சுற்றுவட்டார கிராம மக்கள் தேவபுரீஸ்வரர் கோவிலில் குவிந்து வருகின்றனர். நாகை அருகே உள்ள பழமை வாய்ந்த கோவிலில் இருந்து குலோத்துங்க சோழர்கால அம்பாள் சுவாமி சிலைகளும் பூஜை பொருட்களும் கண்டெடுக்கப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து தோண்டத் தோண்ட பல்வேறு சிலைகள் வருவதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News