சீரான குடிநீர் கேட்டு உதவி மின்பொறியாளர் அலுவலகம் முற்றுகை

வி.மாதேப்பள்ளி கிராம மக்கள் இரண்டு வருடமாக சீரான குடிநீர் இல்லாததால் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகை.

Update: 2021-08-24 10:30 GMT

வி.மாதேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சீரான குடிநீர் இல்லாததால் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள வி.மாதேப்பள்ளி அடுத்த சையத் நகர் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் 2 வருடங்களாக சீரான குடிநீர் வசதி செய்து தரவில்லை எனக்கூறி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்,  சையத் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டுமானால் மும்முனை மின்சாரம் தேவைப்படுவதாகவும், மும்முனை மின்சாரம் இல்லாத காரணத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைப்பதில்லை எனவும், தினமும் டிராக்டர் மூலமாக பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தண்ணீர் வாங்குவதாகவும், எனவே மும்முனை மின்சார இணைப்பு தரக்கோரி பல முறை வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு செய்ததாகவும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் குடிதண்ணீர் இல்லாததால் தாங்கள் எந்தவித வேலையும் செய்ய முடியவில்லை என பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று வி. மாதேப்பள்ளி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை காலி குடங்களுடன் வந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News