விவசாய நிலங்களில் புகுந்த காட்டுயானைகள் அட்டகாசம்: வனத்துறையினர் விரட்டியடிப்பு

விவசாய நிலங்களில் புகுந்த காட்டுயானைகள் கூட்டம் : பட்டாசுகள் வெடித்து விரட்டும் பணியில் வனத்துறையினர்.

Update: 2021-11-15 12:50 GMT

தேன்கனிகோட்டை அருகே விவசாய நிலங்களில் சுற்றிதிரியும் யானை கூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகே உள்ள மரக்கட்டா வனப்பகுதியிலிருந்து நேற்று நள்ளிரவு வெளியேறிய 10க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கூட்டம் பல்வேறு கிராமப் பகுதிகளின் வழியாக சென்று இன்று காலை அந்தேவணப்பள்ளி கிராமத்தின் அருகிலுள்ள பெரிய ஏரி பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது.

காட்டுயானைகளை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று யானைகள் கூட்டத்தை பட்டாசுகள் வெடித்து விரட்டினர்.

ஆனாலும் யானைகள் அதேபகுதியில் விவசாய நிலங்களில் சுற்றி திரிந்துள்ளது. தொடர்ந்து அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டுயானைகள் அனைத்தும் முகாமிட்டுள்ளது. இந்த யானைகளை இரவு நேரத்தில் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து அந்த காட்டு யானைகளை கண்காணித்தும் வருகின்றனர்.

அந்தேவனப்பள்ளி கிராமப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் அந்தேவணபள்ளி, கங்கதேவனப்பள்ளி, முனுகனப்பள்ளி, தொட்டூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News