தளி அருகே தைல தோப்பில் தஞ்சமடைந்த யானைகள் கூட்டம்: வனத்துறையினர் விரட்டியடிப்பு

தளி அருகே தைல தோப்பில் தஞ்சமடைந்த யானைக் கூட்டங்களை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர்.

Update: 2022-01-08 13:43 GMT

யானைகளால் சேதமான வாழை மரங்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே தேவகானப் பள்ளி என்ற கிராமத்தின் பகுதியில் 25க்கும் மேற்ப்பட்ட காட்டு யானைக்கூட்டங்கள் தைலத் தோப்பில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், யானைகளை கண்காணித்து வந்தனர். பகல் நேரம் என்பதால் யானைக்கூட்டங்கள் வெளியேற முடியாமல் தோப்பிலே தஞ்சமடைந்தன. மாலைப்பொழுதில் 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மட்டும் வேட்டை தடுப்பு காவலர்கள் யானைக் கூட்டங்களை பட்டாசு வெடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர்.

இந்நிலையில் யானைக்கூட்டங்கள் இரவு முழுவதும் மஞ்சுநாத் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஒரு ஏக்கர் பரப்பு வாழைத் தோட்டங்களில் புகுந்து மரங்களை சேதப்படுத்தியும், காலால் மிதித்தும் நாசப்படுத்தியது. இதேப்போல் அங்கு அறுவடை செய்து குவிக்கப்பட்டிருந்த ராகி போர்களையும் சேதப்படுத்தி உள்ளது.

பின்னர் யானைக் கூட்டங்களை பட்டாசு வெடித்து தளி அருகே உள்ள தேவர் பெட்டா வனப்பகுதிக்கு விரட்டிச் சென்றனர்.

யானைக் கூட்டங்களை காண அப்பகுதி பொதுமக்கள் திரண்டதால் பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்காக தளி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வாழைத்தோட்டம் மற்றும் ராகி பயிர்கள் யானைகளால் சேதம் அடைந்ததற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News