குமரியில் வெடிவைத்து காட்டுப்பன்றி வேட்டை: ஒருவர் கைது - 4 பேருக்கு வலை

கன்னியாகுமரி அருகே, வெடிவைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய வழக்கில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். 4 பேரை தேடி வருகின்றனர்.

Update: 2021-06-30 12:45 GMT

இறச்சகுளம் அருகே வெடிவைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடியவர்களை, வனத்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், இறச்சகுளம் அருகே தென்றல் நகர் பகுதியில்,  சுமன் என்பவர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். கோழிப்பண்ணையில் இரவு நேரங்களில் காட்டு பன்றிகள் வந்து, கோழியை கொன்று விடுவதாக கூறப்படுகிறது. 

காட்டுப்பன்றி நடமாட்டத்தை தடுக்க, வெடி பொருள் கலந்து உணவை தயார் செய்து பண்ணையில், சுமன் வைத்துள்ளார். வழக்கம்போல் கோழி பண்ணைக்குள் வந்த காட்டுப்பன்றி, வெடி குண்டு வைக்கப்பட்டிருந்த உணவை உட்கொண்ட போது, அது வெடித்ததில்,  காட்டு பன்றியின் வாய் மற்றும் முகம் சிதைந்து, இறந்து விட்டது.

இதை தொடர்ந்து, சுமன் மற்றும் அவரது நண்பர்களான இறச்சகுளம் பகுதியை சேர்ந்த சிவா, ராஜவேல், அஜய் ,ராஜா ஆகிய 5 பேரும், காட்டு பன்றியை வெட்டி இறைச்சியை பங்கு போட்டு கொண்டிருந்தனர். இது குறித்த தகவலறிந்து வந்த வனச்சரகர் மணி மாறன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

வனத்துறையினரை கண்டதும்,  4 பேர் தப்பி ஓடிய நிலையில், சுமன் மட்டும் பிடிபட்டார். அவரை கைது செய்த வனத்துறையினர், அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News