13500 நபர்களிடம் சுமார் 650 கோடி மோசடி வழக்கு - சிபிஐ விசாரிக்க கோரிக்கை..!

13500 நபர்களிடம் சுமார் 650 கோடி மோசடி வழக்கை சிபிஐ விசாரிக்க முதலீட்டாளர்கள் கோரிக்கை.

Update: 2021-06-11 14:45 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லையோரம் அமைந்துள்ள பள்ளியாடி கிராமத்தை சேர்ந்தவர் நிர்மலன், இவரை தலைவராக கொண்டு இவரது குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வந்த நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனம் 2017 ஆம் ஆண்டு திவாலானதாக கூறப்பட்டது.

இதனால் அந்த நிதி நிறுவனத்தில் 650 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருந்த சுமார் 13500 பேர் பாதிக்கப்பட்டனர், இதனால் தமிழக கேரளப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று முதலீட்டாளர்கள் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள் கூறும் போது கடந்த நான்கு ஆண்டுகளாக இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றும் முதலீட்டாளர்களுக்கு சிறிதளவு பணம் கூட இதுவரை கிடைக்கவில்லை.

பணத்தை ஏமாற்றி ஜாமினில் வெளி வந்துள்ள நிதி நிறுவன அதிபர் நிர்மல் இன்று சர்வ சாதாரணமாக சுற்றி திரிவதோடு அவரிடம் இருக்கும் சொத்துக்களையும் விற்று வருகிறார், இதனால் விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை அதிகாரிகள் மீது தங்களுக்கு நம்பகத்தன்மை இல்லை.

எனவே இந்த வழக்கை சிபிஐ அல்லது அமலாக்கத் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். ஏற்கனவே எங்களது கோரிக்கை தொடர்பாக பிரதமர், குடியரசு தலைவர், கவர்னர், முதல்வர் உள்ளிட்டோருக்கு மனு அளித்து உள்ளோம்.

மேலும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிட உள்ளோம், எங்களது கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை என்றால் ஏமாற்றம் அடைந்த அனைத்து முதலீட்டாளர்களையும் இணைத்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News