தாளவாடி அருகே புலி தாக்கி பசுமாடு உயிரிழப்பு..!
தாளவாடி அருகே மல்லன்குழி கிராமத்தில் புலி தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவத்தால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.;
புலி கோப்பு படம்
தாளவாடி அருகே மல்லன்குழி கிராமத்தில் புலி தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவத்தால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகள்ளி ஆகிய பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, கரடி, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் காணப்படுகின்றன.
இந்நிலையில், தாளவாடி அருகே உள்ள ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்த பசுவண்ணா (வயது 29) என்பவர், தனது பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு திரும்பாத நிலையில் பசுவண்ணா தேடிச் சென்றுள்ளார். அப்போது, வனப்பகுதியை ஒட்டிய மேய்ச்சல் நிலத்தில் பசுமாடு வயிற்றில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். இதில், புலி தாக்கி பசுமாடு இறந்தது தெரியவந்தது. இதனால், அப்பகுதி கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.