சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்து - தனியார் மில் வேன் மோதல்; 12 பேர் காயம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்து - தனியார் மில் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-07-05 11:15 GMT

விபத்துக்குள்ளான அரசு பேருந்து - தனியார் மில் வேனை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியலிருந்து உக்கரம் காவிலிபாளையம் வழியாக சத்தியமங்கலம் நோக்கி 6ம் எண் அரசு டவுன் பேருந்து இன்று (புதன்கிழமை) காலை சென்று கொண்டிருந்தது. பேருந்தை சத்தியமங்கலம் நேருநகரை சேர்ந்த நாகராஜ் (50) என்பவர் ஓட்டினார்.

பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதேபோல், சத்தியமங்கலம் பகுதியில் இருந்து மில் தொழிலாளர்களை ஏற்றிய தனியார் மில் வேன் காவிலிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. வேனை நம்பியூர் வேலம்மாள் தெருவை சேர்ந்த வெள்ளிங்கிரி (49) என்பவர் ஓட்டினார்.


அப்போது, சத்தியமங்கலம் அடுத்துள்ள அழகிரிகாலனி என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக அரசு பேருந்தும், தனியார் மில் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான. இதில் அரசு பேருந்து மற்றும் மில் வேனின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் உட்பட 12 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும்  தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம், குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர். இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News