அரூரில் வீடுகளின் முன்பு நிறுத்தி வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு

சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2023-10-25 12:17 GMT

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருக்கும் காட்சி

அரூர் பகுதியில் நேற்று இரவு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள், முகப்பு விளக்குகளை மர்மநபர்கள் சிலர் உடைத்து சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பீதியில் உறைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள மேல்பாட்சா பேட்டை, கீழ்பாட்சாபேட்டை, அசோகா பட்டறை, தில்லை நகர், முருகன் கோவில் தெரு, சுடுகாடு மேடு உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

வாகனங்களின் உரிமையாளர்கள் இன்று அதிகாலையில் எழுந்து பார்த்தபோது தங்களது வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார், இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள்கள், வேன், கார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவற்றின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகளை உடைத்து சென்று உள்ளனர்.

எதற்காக உடைத்து சென்றனர்?. அவர்கள் நோக்கம் என்ன? என்று தெரியவில்லை. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போரீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து அரூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்கள் அரூர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்மநபர்களால் வாகனங்களின் கண்ணாடி உடைப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News