தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர் மழையால் தென்பெண்ணையாற்றில் மூன்று மாதங்களுக்குப்பின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2021-09-05 05:39 GMT

தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்.

கர்நாடக மாநிலத்தில் உருவாகி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கேஆர்பி அணை மற்றும் திருவண்ணாமலை சாத்தனூர் அணைகளில் நீர் நிரம்புகிறது.

மேலும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள கே.ஈச்சம்பாடி அருகில் ஒரு சிறிய அணைகட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆண்டுதோறும் மூன்று முறை வெள்ளப்பெருக்கு ஏற்படும் தென்பெண்ணை ஆற்றில் கடந்த 3 மாதங்களாக மழையின்றி வறண்டு காணப்பட்டது.

தற்பொழுது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. கடந்த ஒரு வார காலமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறுகின்ற தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக வரண்டு கிடந்த தென்பெண்ணை ஆற்றில் தற்பொழுது தண்ணீர் வர தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தென் பெண்ணையாற்றின் குறுக்கே கேரள ஈச்சம்பாடியில் கட்டப்பட்டுள்ள சிறிய அணைக்கட்டு நிரம்பி தண்ணீர் ஆற்றில் வழிந்தோடுகிறது. மேலும் ஓசூர் கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தென்பெண்ணையாற்றில் கூடுதலாக தண்ணீர் வர வாய்ப்புள்ளது. இந்த நீர்வரத்தால், நவலை, பெரமாண்டப்பட்டி, தொட்டம்பட்டி, எம்.வெளாம்பட்டி, கீழ்மொரப்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News