அரூரில் மர்ம காய்ச்சலுக்கு மாணவர் உயிரிழப்பு: மருத்துவமனைகள் மீது வழக்கு

மர்ம காய்ச்சலுக்கு மாணவர் உயிரிழந்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உறவினர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Update: 2023-10-11 13:52 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட மாணவரின் உறவினர்கள் 

தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட சூரப்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகரசன் மகன் கிரி (வயது22) என்பவர் கடந்த சிலதினங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை அவர் சிகிச்சைக்கு வந்தபோது உடல் நலிவுற்று இருந்ததை பார்த்து தனியார் மருத்துவமனை மருத்துவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தார்.

உடனே கிரியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு கிரியை பரிசோதனை செய்த போது இறந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து உறவினர்கள் கிரியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியும் தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உடலை வாங்க மறுத்து அரூரில் உள்ள சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானம் ஆகாததால் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலின் போது காவல்துறையினருக்கும்பொதுமக்களுக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த வட்டாட்சியர் பெருமாள் இறந்து போன கிரியின் தந்தை மற்றும் உறவினர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு கிரியின் இறப்பிற்கு மருத்துவர்கள் தான் காரணம் என தெரிய வந்ததால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததார்.

இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து கிரியின் தந்தை அழகரசன் கொடுத்த புகாரின் பேரில் அரூர் காவல்துறையினர் கிரிக்கு சிகிச்சை அளித்த 2 தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கிரியின் உறவினர்களான சூரம்பட்டியைச் சேர்ந்த சம்பத், அரசு, அழகு, குமார், ரமேஷ், அழகேசன், கண்ணையன், வினோத் குமார், தாமோதரன், சீனிவாசன் மற்றும் ஜடையம்பட்டியைச் சேர்ந்த ரவி உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags:    

Similar News