சுற்றுலா பயணிகளிடம் தகராறு செய்ததாக வனச்சரகர் கைது

வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு பதிவு செய்து கைது செய்தனர்.

Update: 2021-09-23 16:45 GMT

வனச்சரகர் ஜெயச்சந்திரன்

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சிறு குன்றா வனப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இங்கு வால்பாறை நீதிமன்ற எழுத்தர் மனோகரனின் விருந்தினர்களாக, சுற்றுலா பயணிகள் இரண்டு பேர் நேற்றிரவு தங்கி உள்ளனர். இதனிடையே இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் இருவரும் தங்கும் விடுதியை விட்டு வெளியேறி வனப்பகுதியில் சுற்றியதாக தெரிகிறது. இதனை இரவு நேர ரோந்து பணியில் இருந்த வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் பார்த்து கண்டித்ததாகவும், வன விலங்குகள் அதிகம் நடமாடுவதால் வெளியில் சுற்ற வேண்டாமென கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் வனச் சரகருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன், சுற்றுலா பயணிகளை வன விலங்குகள் இரவு நேரத்தில் கட்டாயப்படுத்தி வெளியற்றதாகவும், மது போதையில் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் வால்பாறை நீதிமன்ற எழுத்தர் மனோகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வால்பாறை காவல் துறையினர் வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு பதிவு செய்து, கைது செய்தனர்.

இந்நிலையில் வால்பாறை வனச்சரகரை முறையாக விசாரிக்காமல் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறி, அட்டகட்டி சோதனைச் சாவடி முன்பு 200க்கும் மேற்பட்ட வனத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வனச்சரகரை மிரட்டியதோடு, நீதித் துறையின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வனச்சரகரை கைது செய்து இருப்பதாக வன ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News