கனமழை காரணமாக இடிந்து விழுந்த வீடு ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்..!

கனமழை காரணமாக நள்ளிரவு 2 மணி அளவில் பலத்த சத்தத்துடன் செந்தில்குமாரின் வீடு இடிந்து விழுந்தது.

Update: 2024-07-16 07:30 GMT

கோப்பு படம் 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.  கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதிக்கு அதிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரப் பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக வால்பாறை, பொள்ளாச்சி, ஆழியார், ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் ஒடைய குளம் அறிவொளி நகரில் உள்ள செந்தில்குமார் என்பவரது வீட்டில் குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கனமழை காரணமாக நள்ளிரவு 2 மணி அளவில் பலத்த சத்தத்துடன் செந்தில்குமாரின் வீடு இடிந்து விழுந்தது. அப்போது அனைவரும் சுதாரித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஓடியுள்ளனர். இதனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் உயிர்தப்பினர். இது குறித்து அறிந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இடிந்து விழுந்த வீட்டை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News