விவசாய தோட்டத்தில் புகுந்து மரவள்ளி, தென்னைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்..!

7 யானைகள் கொண்ட யானை கூட்டம் ராஜப்பன், வெங்கடாசலம் மற்றும் கருப்புசாமி என்பவர் விவசாய தோட்டத்திற்கு புகுந்தது

Update: 2024-08-08 06:00 GMT

விளை பயிர்களை சேதப்படுத்திய யானைகள்

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் அதையொட்டிய வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம்.

இதனிடையே தொண்டாமுத்தூர், மருதமலை, பேரூர் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மனித - யானை மோதலில் உயிரிழப்புகள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்கள் ஆகியவை நடந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூர் பகுதியில் 7 யானைகள் கொண்ட யானை கூட்டம் ராஜப்பன், வெங்கடாசலம் மற்றும் கருப்புசாமி என்பவர் விவசாய தோட்டத்திற்கு புகுந்தது. அப்போது அங்கு 1 1/2 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த மரவள்ளி மற்றும் தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி சென்று உள்ளது.

இது குறித்து விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து உள்ளனர். தொடர்ந்து யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்துவதை தடுக்க அரசு மற்றும் வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறும் அப்பகுதி விவசாயிகள், காட்டு யானைகள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News