சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு உதவும் முதல்வர்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

சிறு, குறு தொழில் வளர்ச்சியை உறுதி செய்யும் இடத்தில் முதல்வர் இருக்கிறார் என தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறினார்.

Update: 2024-09-16 10:15 GMT

விழாவில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா.

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் அருகே செமி கன்டெக்டர் தயாரிக்கும் தனியார் உற்பத்தி நிறுவன திறப்பு விழா நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா , இது தமிழ்நாட்டிற்கு பெருமையான தருணம் எனவும், முதலீட்டிற்கு முதன்மையான மாநிலமாக பார்க்கப்படுகிறது என தெரிவித்தார். தமிழக முதல்வர் அமெரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ரூ. 7513 கோடி முதலீடு பெற்று வேலைவாய்ப்பை உருவாக்கி வந்துள்ளார் எனவும், அமெரிக்கா பயணத்தின் போது கையெழுத்தான ஒப்பந்தபடி இந்நிறுவனம் திறக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இந்த அரசு விமர்சனங்களுக்கு திறந்த மனதுடன் அணுகும் எனவும், சாலை தொடர்பாக உங்கள் குறை தீர்த்து வைக்கப்படும் எனவும் எங்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் போல் திறன் வாய்ந்த அதிகாரிகள் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது 6 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற்ற போது கூட ஏன் 10 லட்சம் இல்லை என எதிர்க்கட்சியினர் சொன்னார்கள். உலக அளவில் கோவையை தொழில் மையமாக மாற்ற உள்ளோம் எனவும் தெரிவித்தார். திறன் வளர்ச்சிக்கு நான் முதல்வன் திட்டம், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தொழில் அனுமதி ஒற்றை சாளர முறையில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு எல்லா வகையிலும் உதவ தயார் எனவும் தெரிவித்தார். மின் வாகனங்கள், ஜவுளி ஆகிய தொழில்களுக்கு தமிழகம் முன்னணி மையமாக உள்ளது எனவும், 33% நாட்டின் மின்னணு ஏற்றுமதியாக உள்ளது எனவும்,தமிழகம் செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக மாறும் எனவும் தெரிவித்தார். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா கொடியை ஏற்றி வையுங்கள். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தெரியவரும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது இந்த YES நிறுவனம் திறப்பு விழாவிற்கு முன்னதாகவே, அமெரிக்காவில் இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தமிழக முதல்வரை சந்தித்தனர். தமிழகத்தில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என முதல்வர் அவர்களிடம் கேட்டிருந்தார். தற்போது ரூ. 15 கோடி முதலீட்டில் இந்த நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 150 கோடி முதலீட்டில் அடுத்த யூனிட்டை இவர்கள் திறக்க இருக்கின்றனர் என தெரிவித்தார்.

ஆறு மாதத்தில் எவ்வளவு வேகமாக நாம் வேலை பார்க்கிறோம் என்பதை இந்த நிறுவனத்தினர் பார்க்கின்றனர் எனவும், இதன் மூலம் கோவை மிக விரைவில் செமி கண்டக்டர் தொடர்புள்ள நகரமாக மாறப்போகிறது எனவும் தெரிவித்தார். முதலீடு எதில் கொண்டு வருகிறோம், எப்படி கொண்டு வருகின்றோம் என்பது தான் முக்கியம் எனக்கூறிய அவர், வேலை வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், நல்ல ஊதியத்துடன் இருக்கிறது, இதற்கு கோவை நகரம் சரியான இடமாக இருக்கிறது என்பதால் கோவையில் முதலீடு செய்கின்றனர் என தெரிவித்தார். சிறு, குறு தொழில் வளர்ச்சியை உறுதி செய்யும் இடத்தில் முதல்வர் இருக்கிறார் எனவும், சிறு சிறு தடைகள் எங்கு இருந்தாலும் அதை அவர் சரி செய்வார் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News