கருமத்தம்பட்டியில் நிற்காமல் சென்ற பேருந்து : சிறைபிடித்து மக்கள் போராட்டம்..!

பேருந்தை சுற்றி வளைத்து சிறைபிடித்த ஊர் பொதுமக்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-09-05 08:30 GMT

பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அவிநாசி சாலை வழியாக திருப்பூருக்கு ஏராளமான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்தில் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை காந்திபுரத்தில் திருப்பூர் செல்லும் கே.எம்.எஸ் என்ற தனியார் பேருந்தில் கருமத்தம்பட்டி செல்வதற்காக சில பயணிகள் ஏறி உள்ளனர். பேருந்து கிளம்பிய நிலையில் நடத்துனர் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காது  எனக் கூறி, அவர்களை திட்டி பாதி வழியிலேயே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.

பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள், இதுகுறித்து ஊர்பொது மக்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். பேருந்து கருமத்தம்பட்டி அருகே வந்த போது சுற்றி வளைத்து சிறைபிடித்த ஊர் பொதுமக்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஊர் பொதுமக்கள் பேருந்தை தடுத்து நிறுத்தி சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News