ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: கண்களை கட்டியபடி மனு அளித்த மக்கள்

சூலூரை நகராட்சியாக மாற்றம் செய்தால், அருகே உள்ள கலங்கல் ஊராட்சியை இணைக்க கூடாது என மக்கள் மனு அளித்தனர்.

Update: 2024-07-01 09:42 GMT

கண்களை கருப்பு துணியால் கட்டியபடி மனு அளிக்க வந்த கலங்கல் கிராம மக்கள்

கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூலூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு சூலூரை நகராட்சியாக மாற்றம் செய்தால், அருகே உள்ள கலங்கல் ஊராட்சியை இணைக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கண்களை கருப்பு துணியால் கட்டியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவலர்கள் கருப்பு துணிகள் அகற்றிய பின்னர் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் சுமார் 10,000 பேர் கலங்கல் ஊராட்சி பகுதியில் வசித்து வருவதாகவும், இதில் 650 க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் மத்திய அரசின் நிதி குழு மூலமாக ஊராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும், வீட்டு வரி சதுர அடிக்கு 1 ரூபாய் 10 பைசா வசூலிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

ஊராட்சியை நகராட்சியாக மாற்றம் செய்தால் 650 குடும்பங்களில் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் எனவும், பல மடங்கு வரி அதிகரிக்கப்படும் என தெரிவித்தனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் ஏராளமானோர் இங்கு வசித்து வருவதால் மக்களின் உணர்விற்கு மதிப்பளித்து கலங்கல் ஊராட்சியை நகராட்சியாக மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தினர். இக்கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

Similar News