கோவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி என பாஜக புகார்

கோவை நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி இருந்ததாக பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

Update: 2024-04-22 08:07 GMT

கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த பாஜக வினர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதில் நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சூலூர் பேரூராட்சியில் 148,151 முதல் 160 வரை பூத்துகளில் அகர வரிசைப்படி மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் வைக்கப்படாமல், தலைகீழாக வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் குழப்பமடைந்தாகவும், அந்த பகுதிகளில் மறு தேர்தல் நடத்தவும், இதனை மாற்றி வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து பாஜக சூலூர் ஒன்றிய கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் கூறுகையில் நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலின் போது வேட்பாளர்களின் பெயர்கள் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் அகர வரிசையில் வைக்கப்படாமல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று தலைகீழாக மாற்றி வைக்கப்பட்டது. இதனால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்தனர். இது குறித்து அங்கு பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகளுடன் கேட்ட போது சரியான பதில் அளிக்கவில்லை. எனவே வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளோம்.

அதே சமயம் கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏராளமானோர் வாக்களிக்க வந்திருந்தும் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியல் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். இதற்கு யார் காரணம் என கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாநில தலைவரின் ஆலோசனையின் பெயரில் கண்ட ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News