மது பான கடைகளை அரசு நடத்தக் கூடாது - பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

மதுபான கடைகளை அரசு நடத்தாமல் தனியாரிடம் நடத்த கேட்கிறோம் என கோவையில் அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறினார்.

Update: 2024-06-30 10:56 GMT

செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை.

மதுபான கடைகளை அரசு நடத்தக்கூடாது தனியார் நடத்த கோருகிறோம் என தமிழக  பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

கோவை - அவினாசி சாலையில் உள்ள நீலாம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் பாஜகவின் கோவை பாராளுமன்ற தொகுதி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

டாஸ்மாக் மதுபானங்கள் தரமானதாக இல்லை என மூத்த அமைச்சரே சட்டமன்றத்தில் உண்மையை ஒப்புக்கொண்டு விட்டார். அரசு வேலை செய்யவில்லை, அரசு வேலை தவறாக செய்கிறது.  தமிழகம் முழுவதும் பாஜக போட்டியிட்ட இடங்களில்.கட்சியின் செயலாக்கத்தை ஆய்வு செய்து வருகிறோம். கோவையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களை சந்திக்க உள்ளார். நான் வேட்பாளராக பங்கேற்க வந்துள்ளேன். அடுத்த தேர்தலுக்கு தயாராவது, நடந்து முடிந்த தேர்தலில் பெற்ற நல்ல விஷயங்களை, தோல்வி கண்ட காரணத்தை ஆராய்ந்து செய்ய இந்த கூட்டம் நடத்த உள்ளோம்.

சி.ஏ.ஜி. டாஸ்மாக் நிறுவனத்தை மேற்பார்வை செய்துள்ளது. டாஸ்மாக்கிற்கு வரக்கூடிய வருமானம் வெளிப்படையாக இல்லை என அறிக்கை வழங்கியுள்ளது. டாஸ்மாக்கின் ஆண்டு அறிக்கை எடுப்பதே மிகவும் சிரமம். அதனால் சி.ஏ.ஜி. அறிக்கை ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அமைச்சர் துரைமுருகன் சொன்னது சில பேர் நகைச்சுவையாக சொன்னாலும், நாங்கள் கள்ளக்குறிச்சி சென்றபோது சிலர் அதை சொன்னார்கள், தண்ணீர் போல் தான் இருப்பதாக சொன்னார்கள். டாஸ்மாக் மதுவை விட போதை அதிகமாக வேண்டும் என்பதால் கள்ளச்சாராயம், போதைப்பொருள் நோக்கி செல்வதாக சொன்னார்கள். திமுகவை சார்ந்த எந்த புள்ளி டாஸ்மாக் உற்பத்தி செய்கிறார்கள், அதன் தரம் ஆய்வுக்கு உட்படுத்த படுகிறதா? அமைச்சர் துரைமுருகன் சொன்னது உண்மைதான்.

தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு சிறப்பு ஊதியம் தமிழக அரசால் இன்னும் கொடுக்கவில்லை. கள்ளக்குறிச்சியில் ஓடிப்போய் 10 லட்சம் ரூபாய் கொடுக்கும் போது, மக்களுக்காக போராடும் காவல் துறைக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தை கொடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் தவறில்லை. துபாய், சிங்கப்பூர், போன்ற வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை கொடுக்காமல் இருப்பது தான் கேள்வியை எழுப்புகிறது. பொதுமக்கள் வரிப்பணத்தில் செல்லும் முதலமைச்சர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் என்னவென்று கேட்டால், ஜீரோ தான்.  நீட் பொறுத்தவரை அடித்தட்டு மக்களுக்கு மருத்துவக்கல்லூரிக்கு செல்கின்றனர். ஏன் வெள்ளை அறிக்கை கொடுக்க மறுக்கின்றனர்? உச்ச நீதிமன்றம் செல்ல மறுப்பது ஏன்? தரவுகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றம் கதவை தட்ட மறுக்கின்றனர். ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நாடகம் நடத்தி வருகின்றார்.

தென்னை மரம், பனை மரம் உள்ளிட்டவைகளில் இருந்து எடுக்கப்படும் கள்ளுவிற்கு ஆண்டாண்டு காலமாக கள்ளுக்கடை இருந்தது. அதை கொண்டு வர சொல்கிறோம். படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை குறைக்க சொல்கிறோம். அரசு நடத்தாமல் தனியாரிடம் நடத்த கேட்கிறோம். குஜராத், கேரளா போன்று மது விற்பனை நடத்த சொல்கிறோம். சாராய விற்பனையில் திமுகவை சார்ந்திருக்கின்றனர்.

இவ்வாறு செய்தியாளர் சந்திப்பின்போது அண்ணாமலை கூறினார்.

Tags:    

Similar News