கோவையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்

கோவை மாவட்டத்தில் 646 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

Update: 2021-09-01 04:45 GMT

மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை சோதனை

கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் இன்று 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள் துவங்கியுள்ளன. நடப்பு கல்வியாண்டில் 3 மாதங்களுக்கு பிறகு, இன்று முதல் பள்ளிகளில் நேரடியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் 646 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டும் தனிமனித இடைவெளியை பின்பற்றி அமர வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், மாணவர்களுக்கு நாள்தோறும் உடல்வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கோவையில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு பள்ளிகள் தூய்மைபடுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று பள்ளி,கல்லூரி திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளி வளாகத்தில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்னரே வகுப்பறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல கல்லூரிகளிலும் இன்று முதல் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News