வீட்டில் 1 கிலோ வெள்ளிப்பொருள், தங்க நகை திருட்டு

கோவை சிங்காநல்லூரில், வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-04-28 13:45 GMT

கோவை சிங்காநல்லூர் எஸ். எஸ். காலனி, கருணாநிதி நகர், ஹவுசிங் போர்டு பகுதியில் வசிப்பவர் விசுவநாதன் வயது 65. இவர் தனியார் கம்பெனியில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தன் மனைவி புஷ்பலதா உடன், வீட்டில்  வசித்து வருகிறார்.

நேற்று 27ஆம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு தன் மனைவியுடன், கோவை வடவள்ளியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார். இன்று மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து, விசுவநாதன் அதிர்ச்சியடைந்தார்.

வீட்டிற்குள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், பீரோவில் இருந்த ஒரு பவுன் மதிப்பிலான கம்மல் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகள் திருடு போயிருப்பது தெரிந்தது. இவற்றின் மொத்த மதிப்பு 2 லட்சத்திற்கு ஆகும்.

இது குறித்து,  சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் உடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News