காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு வழங்க கோரி மனு
இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டு பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.;
காதல் திருமணம் செய்த தம்பதி பிரேம்குமார், பாென்மணி.
கரூர் மாவட்டம் உடையாப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் நல்லம்மாள் ஆகியோரின் மகன் பிரேம்குமார் (26). இவரும் அதே ஊரைச் சேர்ந்த மொட்டையன் அமராவதி ஆகியோரின் மகள் பொன்மணி (24) என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டு பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக வேறு நபருடன் கட்டாயத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதியன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவை மருதமலை முருகன் கோவிலில் இந்து முறைப்படி சாட்சிகளின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் திருமணம் செய்து கொண்ட தகவலை தெரிந்து கொண்ட இரு வீட்டு பெற்றோரும் தம்பதியினரை கண்டுபிடித்து ஆணவக் கொலை செய்ய திட்டமிட்டு வருவதாகவும், எனவே எங்கள் இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டிய தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், தம்பதியினர் பாதுகாப்பு வேண்டி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.