கோவை அருகே விளைநில முள்வேலியில் சிக்கி 2 வயது பெண் சிறுத்தை பலி

கோவை அருகே கேரள மாநிலம் ஆனைகட்டியில் விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலியில் சிக்கி 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை உயிரிழந்தது.;

Update: 2022-04-13 00:00 GMT

முள் வேலியில் சிக்கி பலியான சிறுத்தை. 

தமிழக கேரள எல்லையில் கோவை மாவட்டமும், பாலக்காடு மாவட்டமும் இணையும் இடத்தில் ஆனைகட்டி பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள புதூர் அருகே உள்ள சீரக்கடவு பகுதியில் சிறுத்தை ஒன்று முள்வேளியில் சிக்கியிருப்பதாக கேரள மாநிலம், மன்னார்காடு அருகேயுள்ள அட்டப்பாடி சரக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்த போது, சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை முள்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுத்தையின் உடலை மீட்டுள்ள வனத்துறையினர், உடலை பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைகள், காட்டுமாடுகள், கரடிகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ள நிலையில், அவ்வப்போது யானைகள் மற்றும் சிறுத்தைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி உள்ளது. சிறுத்தை உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News