பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழை இலை விலை உயர்வு
விநாயகர் சதுர்த்தி தினமான இன்று, பொள்ளாச்சியில் வாழை இலை விலை அதிகரித்தது. கடைகளில், ரூ.15 வரை வாழை இலை விற்கப்பட்டது.;
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரந்தோறும் புதன், சனிக்கிழமை வாழை இலை ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வாழை இலை ஏலம் இன்று நடந்தது. ஏலத்திற்கு பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் வெளியூர்களில் இருந்து வாழை இலை கொண்டு வரப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாள் என்பதால், வாழை இலை ஏலம் மும்முரமாக நடந்தது. கடந்த வாரம் ஒரு கட்டு வாழை இலை ரூ.2 ஆயிரத்திற்கு ஏலம் போனது. இந்த வாரம் ஒரு கட்டு ரூ.2,500 வரை ஏலம் போனது. ஒரு கட்டுக்கு 100 வாழை இலைகள் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் சில்லறை கடைகளில், ஒரு இலை ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டது.