வனப்பகுதியில் விலங்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு: சிசிடிவியில் பதிவு

கோவை வனப்பகுதியில் யானை புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சிசிடிவி பதிவில் தெரியவந்துள்ளது.

Update: 2021-07-17 11:30 GMT

கோவை மாவட்டத்தில் 8 வனச்சரகங்களை உள்ளடக்கி கோவை மண்டல வனப்பகுதி அமைந்துள்ளது. இதில் போலுவம்பட்டி, மதுக்கரை, காரமடை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்கள் கேரள வனப்பகுதியை ஒட்டியும், சிறுமுகை, மேட்டுப்பாளையம் வனச்சரகங்கள்,  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியும் உள்ளது.

இந்த வனச்சரகங்களில் யானை புலி, சிறுத்தை, கரடி மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இதனை பாதுகாக்க வேட்டை தடுப்பு காவலர்களும், வனப்பணியாளர்களும் இரவுபகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வனக் குற்றங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக, வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக,  மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகங்கள் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, செந்நாய், அரிய வகை கழுதைப்புலி ஆகியவற்றின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இது, வனத்துறையினர் பொருத்தியுள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது. வனத்துறையினர் தீவிர ரோந்து பணியும், வனப்பகுதிக்குள் நல்ல சீதோஷ்ணநிலை நிலவுவதால், வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News