பரளிக்காடு சூழல் சுற்றுலா முன்பதிவு துவக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

சுற்றுலா பயணிகள் www.combatorewilderness.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.

Update: 2021-09-28 15:00 GMT

பரளிக்காடு (பைல் படம்)

கொரோனா தொற்று பரவல் காரணமாக பரளிக்காடு சூழல் சுற்றுலா தளத்திற்கு செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில், பல்வேறு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டாலும், பரளிக்காடுவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று முதல் பரளிக்காடு சூழல் சுற்றுலாவிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இந்த வாரம் முதல் அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுலா பயணிகள் www.combatorewilderness.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாவிற்கு அனுமதி வழங்கப்படுமெனவும், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 550 ரூபாயும், 5 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 450 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பயணிகள் சொந்த வாகனம் அல்லது பொது போக்குவரத்து மூலம் பரளிக்காடு செல்லலாம் எனவும், பழங்குடியினர் தயாரித்த உணவு வழங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பவானி ஆற்றில் பரிசலில் பயணம் செய்து பில்லூர் அணையை கண்டு ரசிக்க முடியும் எனவும், மாலையில் பவானி ஆற்றில் குளியலோடு சுற்றுலா முடியும் எனவும் வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். பரளிக்காடு சூழல் சுற்றுலா தலத்திற்கு செல்ல முன்பதிவு துவங்கியிருப்பது சுற்றுலா பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News