கனமழை எச்சரிக்கையால் மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை இரயில் சேவை ரத்து

கனமழை எச்சரிக்கையால் மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை இரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-01-09 12:00 GMT

நீலகிரி மலை ரயில்  (கோப்பு படம்)

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்  கோவை, திருப்பூர், நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கனமழை எச்சரிக்கை காரணமாக உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை இன்று முதல் 11 ம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவையும் 11 ம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மழைக்காலங்களில் கனமழை காரணமாக மண் சரிவு அபாயம் இருப்பதால் நீலகிரி மலை இரயில் சேவை இரத்து செய்யப்படுவது வழக்கம்.

சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரிக்கு மலை இரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகை வரை நீலகிரி மலை இரயில் இயக்கப்படுகிறது.

இந்த நீலகிரி மலை இரயில் தென்னிந்தியாவில் உள்ள ஒரே மலை இரயிலாக அமைந்துள்ளது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமும், குன்னூர் முதல் உதகை வரை டீசலிலும் இந்த மலை  ரயில் இயக்கப்படுகிறது. இரயிலில் பயணிக்கும்போது ரயிலில் இருந்தபடியே  மலைகள், அடர்ந்த காடுகள், ஆங்காங்கே நீர் வீழ்ச்சிகள் இயற்கையின் எழில் கொஞ்சும் கண் கொள்ளா காட்சிகளை காண முடியும். இதனால் இந்த மலை ரயில் உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளையும் கவர்ந்திழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News