போத்தனூர் -பொள்ளாச்சி வழித்தடத்தில் மின்சார ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம்

மின்சார ரெயில் இயக்கும் பணி விரைவில் தொடங்கும் என ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-09-01 11:45 GMT

இரயில் என்ஜின் சோதனை ஓட்டம்.

கடந்த 2009-ம் ஆண்டு இறுதியில் போத்தனூர் - பொள்ளாச்சி மீட்டர் கேஜ் ரெயில்பாதை, அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. தற்போது இந்த அகல ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளது. போத்தனூர் - பொள்ளாச்சி ரெயில்பாதையை மின் மயமாக்க ரூ.37 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் செல்லும் அகல ரெயில் பாதையில் மின் கம்பங்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்று மின் கம்பத்தில் மின் கம்பிகள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்தது.

இந்நிலையில் மின்சார ரயில் செல்லக் கூடிய வழித்தடத்தில் மின் வயரில் தற்போது மின்சாரம் வினியோகிக்க மின் வயர்களும் அமைக்கப்பட்டு மின் கம்பிகள் சரியாக இணைக்கப்பட்டு உள்ளதா? சரியான அளவில் உள்ளதா? என்பது குறித்து நவீன எந்திரம் மூலம் அதிகாரிகள் ஆய்வு நடத்தி முடித்துள்ளனர். இதையடுத்து போத்தனூர்- பொள்ளாச்சி இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில் பாதை மின் வழித்தடத்தில் மின்சார ரயில் என்ஜின் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. போத்தனூரில் இருந்து 12.25 மணிக்கு கிளம்பிய ரெயில் எஞ்சின் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பொள்ளாச்சியை 1.15 மணிக்கு அடைந்தது. இன்னும் இரண்டு கட்ட சோதனைகள் நடைபெற வேண்டி உள்ளது. இந்த சோதனை முடிந்ததும் போத்தனூர் பொள்ளாச்சி இடையே மின்சார ரெயில் இயக்கும் பணி விரைவில் தொடங்கும் என ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News