காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பதவி தருவதில்லை : விஜயதாரணி குற்றச்சாட்டு

Coimbatore News- காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பதவி தருவதில்லை. அவர்கள் பெண்களுக்கு பதவி தர மறுப்பது உண்மை தான் என கோவையில் விஜயதாரணி குற்றம் சாட்டினார்.

Update: 2024-02-25 16:45 GMT

Coimbatore News- கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜயதாரணி

Coimbatore News, Coimbatore News Today- கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியில் விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு பாஜக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விஜயதாரணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியில் நிறைய பிரச்சனைகள் இருந்தன. பெண்களுக்கு உண்டான தளம் என்பது காங்கிரஸ் கட்சியில் மறுக்கப்பட்டதாகவே இருக்கிறது. என்னை தவிர வேறு எந்த பெண்ணும் சட்டமன்ற உறுப்பினராக கூட ஆக முடியவில்லை. என்னை கூட தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலையில் தான், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு உள்ளது. தேசிய கட்சியில் இருந்து இன்னொரு தேசிய கட்சிக்கு சென்றுள்ளேன். 37 ஆண்டுகள் எந்த கட்சிக்கும் செல்லாமல் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றினேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை பார்த்தேன். ஆனால் தலைமை பதவி என வந்தால் பெண்களுக்கு கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் தவறானது. கடந்த 7 ஆண்டுகளாகவே எனக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டது. பாஜகவை பொருத்தவரை எவ்வளவு பெண் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் இருக்கிறார்கள்? அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

பெண்களுக்கும் தலைமை பண்பு இருக்கிறது என்பதை உணர்ந்த கட்சி பாஜக. அதன்வெளிப்பாடே எனது நிலைப்பாடுவிற்கு காரணம். அதனால் தான் என்னை பாஜகவில் இணைத்து கொண்டேன்.  பாஜக உடன் நான் சேர்ந்திருந்தால் தான் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும். மத்திய அரசின் திட்டங்கள் சேரவில்லை எனில், 10 ஆண்டுகளில் பின் தங்கி விடும். இது மக்கள் விரோத போக்கு. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பதவி தருவதில்லை. அவர்கள் பெண்களுக்கு பதவி தர மறுப்பது உண்மை தான்.

அண்ணாமலை யாத்திரை மற்றும் சீரிய முயற்சியால் பாஜக பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. அதுதான் என்னை போன்றவர்கள் பாஜகவில் இணைய காரணம். நாட்டிற்கும், மக்களுக்கும் நன்மை அளிக்கும் கட்சியாக பாஜக வளர்கிறது. அண்ணாமலை தான் எதிர்கட்சியாக செயல்படுகிறார். கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். நான் விருப்பப்பட்டு தேசிய கட்சி என்ற முறையில் என்னை இணைத்து கொண்டுள்ளேன். 

காங்கிரஸ் கட்சியில் எதோவொரு வகையில் புண்பட்டதாலும், நாட்டிற்கும், மக்களுக்கும் பணியாற்ற முடியாது என்பதாலும் பலர் விலகுகிறார்கள். நிறைய பெண்கள் பாஜகவில் பயணிக்கும் வாய்ப்பு மேன்மேலும் அதிகரிக்கும். 37 வருடம் பணியாற்றிய காங்கிரஸ் கட்சி எனக்கு துரோகம் செய்தது. பெண் என்பதால் எனக்கு பதவி தரவில்லை. இப்போது டிவியில் பேட்டி தருகிறவர்கள், ஒரு போன் கூட பண்ணவில்லை. தவறு நடந்தால் தட்டி கேட்கும் ஆளாக இருந்திருக்கிறேன். எங்கு தவறு நடந்தாலும் தட்டிக் கேட்பேன்.

பாஜக என்னை ஆதரித்து, முக்கியத்துவம் அளிக்கிறது. எனக்கு மக்கள் பணியாற்ற வாய்ப்பு தருவார்கள். எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் காணாமல் போகும் நிலையில் காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் அழிவு பாதைக்கு செல்கிறது என்பதை சீமான் நன்கு புரிந்து கொண்டுள்ளார். வானதி சீனிவாசன் அகில இந்திய தலைவர். மக்கள் பிரச்சனையை நன்றாக பேசி கொண்டிருக்கிறார். சட்டமன்றம் செல்வதே மக்கள் பிரச்சனையை பேச தான். அங்கு சபாநாயகர் அனைவருக்கும் வாய்ப்பு தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News