கட்டுவிரியன் பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு..!

பாம்பு பிடிக்கும் போது எதிர்பாராத நிகழ்வாக பாம்பு தீண்டியதில் அவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-08-02 10:15 GMT

பாம்பு கடி (கோப்பு படம்)

கோவை தடாகம் சாலையில் உள்ள இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இவர், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடுவது வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வடவள்ளி அடுத்த காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்குள் பாம்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் முரளி அங்கு வந்து பார்த்தபோது இருசக்கர வாகனங்களுக்கு இடையே 3 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து விஷம் அதிகமுள்ள அந்த பாம்பை அவர் பிடிக்க முயன்ற போது, முரளிதரனின் காலில் பாம்பு தீண்டியுள்ளது. தொடர்ந்து அந்த இடத்தில் இருந்து இரத்த வெளியேறிய நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் மயங்கினார். இது குறித்து அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த 108 ஊழியர்கள் முரளியை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முரளி கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வகையான விஷமுள்ள பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட்டு வந்துள்ளார். பாம்பு பிடிக்கும் போது எதிர்பாராத நிகழ்வாக பாம்பு தீண்டியதில் அவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News