பேங்கில் ரூ.27 கோடி மோசடி: ஸ்டீல் கம்பெனி உரிமையாளர் மீது வழக்கு

பேங்கில் கடன் பெற்று மோசடி செய்த ஸ்டீல் நிறுவனம் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

Update: 2021-03-12 07:30 GMT

கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் ரோஸ்வர் ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஸ்டீல் கம்பெனி செயல்பட்டு வந்தது. இதன் இயக்குனர்களாக ரவிச்சந்திரன், வாணி, ரகுலன், சுந்தரராமன் ஆகியோர் இருந்து வந்தனர். ஏற்கனவே, பெடரல் வங்கியில் கடன் பெற்று இருந்த நிலையில், இயக்குனர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடன் வழங்கபட்டது.

வங்கியில் பெற்ற கடனை முறையாக செலுத்தாமல் இருந்துள்ளனர். மேலும் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள், ஐ.ஒ.பி பேங்கில் இருந்து சலுகைகளை பெற்று அவற்றை தவறாகப் பயன்படுத்தி 27.22 கோடி ரூபாய் பேங்குக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளதும், பேங்கில் இருந்து பெற்ற நிதியை தங்கள் சொந்த நோக்கத்திற்கு மாற்றி இருப்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ரோஸ்வர் ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் இயக்குநர்கள் ரவிச்சந்திரன், வாணி, ரகுலன், சுந்தரராமன் ஆகியோர் மீது கோவை மண்டல இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் பிராந்திய மேலாளர் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்தார்.வங்கிக்கு 27.22 கோடிக்கு தவறான இழப்பை ஏற்படுத்தியது தொடர்பாக ரிசர்வ் வங்கியில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக சிபிஐயிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ரோஸ்வர் ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் அதன் இயக்குனர்கள் மற்றும் உடந்தையாக இருந்த அரசு ஊழியர்கள் மீது கூட்டு சதி, மோசடி, பொது ஊழியர்களை மோசடி செய்தல் உட்பட 4 பிரிவுகளில் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News