பாஜக வளர்ந்துள்ளதாக மாய தோற்றத்தை உருவாக்கும் அண்ணாமலை : எடப்பாடி பழனிசாமி

அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக வளர்ந்துள்ளது போல மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார் அது உண்மை அல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2024-07-05 10:12 GMT

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி.

சென்னை செல்வதற்காக சேலத்தில் இருந்து கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது:-

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றி சில விமர்சனங்களை தெரிவித்துள்ளார். அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளது. அதற்கான காரணங்களை தெரிவித்துள்ளோம். இருந்தும் அதிமுகவை குறை சொல்லி திட்டமிட்டு அண்ணாமலை பேசியுள்ளார்.

இந்த தேர்தலில் அதிமுக போட்டிக்கு வந்தால் 3 அல்லது 4 ஆம் இடம் தான் வந்திருக்கும் என அவர் கூறியுள்ளார். மெத்த படித்தவர், மிகப் பெரிய அரசியல் ஞானி அவர். அவரது கணிப்பு அப்படி உள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரத்தில் அதிமுக வேட்பாளர் சுமார் 6 ஆயிரம் வாக்கு மட்டுமே குறைவாக பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் அதிமுக தான் உள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறியுள்ளோம். ஈரோடு இடைத்தேர்தலில் திமுக எப்படி நடந்துகொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆடு மாடு போல் மக்களை பட்டியில் அடைத்து பரிசு, பணம் கொடுத்து தேர்தலை சந்தித்தனர். அப்போது அண்ணாமலை எங்கள் கூட்டணியில் தான் இருந்தார். அவருக்கும் இது நன்றாகத் தெரியும். இருந்தும் அதிமுக நிலைப்பாடு குறித்து இப்படி சொல்வது கண்டிக்கத்தக்கது.

அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக வளர்ந்துள்ளது போல மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார். அது உண்மை அல்ல. மற்ற கட்சிகளை பற்றியே பேசி வருகிறார். எந்த மத்திய அரசு திட்டத்தையும் தமிழகத்தற்கு கொண்டு வராமல், அண்ணாமலை வாயில் வடை சுட்டு வருகிறார். பொய் செய்திகளை பரப்பி வருகிறார். 100 நாளில் 500 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என பொய் சொல்லி தான் வாக்கு பெற்றுள்ளார். உண்மையை சொல்லி வாக்கு பெறவில்லை. இப்போது மத்தியில் பாஜக ஆட்சி தான் உள்ளது. கொடுத்த வாக்குறுதியை செய்வாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுபோன்ற தலைவரால் தான், 300க்கும் மேற்பட்ட தொகுதியை பெற்ற பாஜக, இப்போது சறுக்கி கூட்டணியில் ஆட்சியில் இருப்பதற்கு காரணம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பல்வேறு கட்சி தலைவர்களும் அதிமுக வாக்குகளை கேட்பது அவரவர் விருப்பம். அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் இணைக்க இது கார்ப்பரேட் கம்பெனி கிடையாது. அதிமுகவிற்கு என விதிமுறைகள் உள்ளது. பெரும்பான்மை தொண்டர்களின் எண்ணமாக, பொதுக்குழுவின் ஒருமித்த தீர்மானத்தோடு தான் அவர்கள் விலக்கப்பட்டனர். மீண்டும் அவர்களை கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லை என உறுதியாக தெரிவித்தார்.

சசிகலா அதிமுகவின் உறுப்பினரே இல்லை. அவர் எப்படி கட்சியை ஒன்றிணைக்க முடியும்? 2021 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து விலகி அம்மா ஜெயலலிதாவின் செயல்களை முன்னெடுப்பேன் எனக் கூறிய சசிகலா, இப்போது கட்சியில் இணைய வேண்டும் என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக பிரிந்த போது ஜானகி அவர்கள் வெளியிட்ட அறிக்கையை போல, கட்சி தலைமைக்கு உடன்பட்டு செயல்படுவேன் என சசிகலா கூற வேண்டும் என தொண்டர்கள் நினைக்கிறார்கள். கள்ளக்குறிச்சியை தொடர்ந்து ஆனைமலை, விழுப்புரம், கடலூர், திருத்தணி ஆகிய பகுதிகளிலும் கள்ளச்சாராயம், விஷச்சாராயம், மெத்தனால் பதுக்கல் வழக்குகள் பதியப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விசாரிக்க அதிமுகவின் மக்கள் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. கோவை, நெல்லை மேயர் பதவி விலகல் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் திமுக உள்ளாட்சி நிர்வாகிகள் செய்யும் ஊழல்களை ஊடகம் வெளிக்கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News