சிறையில் இருந்து முதலமைச்சரின் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கிய பிரபல ரவுடி

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி மோகன் ராம் சிறை கைதி கையிருப்பு பணம் ரூ 20 ஆயிரத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.

Update: 2021-05-28 22:30 GMT

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதிக்கு பல்வேறு தரப்பினரும நிதியுதவி அளித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் ராம். 41 வயதான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடியாக அறியப்பட்ட மோகன் ராம் மீது கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கோவை மாவட்டம் சூலூர் அருகே சிந்தாமணிபுதூர் பகுதியில் கடந்த 2016 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகியோர் ஒரு கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த மோகன் ராம் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு மும்பையில் தலைமறைவாக இருந்த மோகன் ராமை கோவை மாவட்ட காவல் துறையினர் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர். பின்னர் மோகன் ராம் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக மோகன் ராம் இருந்து வருகிறார். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பல்வேறு தரப்பினரும் முதலமைச்சரின் நிவாரண நிதி வழங்குவது குறித்து மோகன் ராம் அறிந்துள்ளார்.

இதையடுத்து சிறைவாசியின் கையிருப்புத் தொகையில் இருந்து 20 ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவெடுத்தார். இதையடுத்து சிறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணனிடம் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாயை வழங்கினார். 

Tags:    

Similar News