தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்கூடுதல் பணியாளர்கள்- கோவை எம்பி கோரிக்கை

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோவை எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-05-27 10:15 GMT

கோவை விருந்தினர் மாளிகையில்  அமைச்சர் சக்கரபாணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை எம்பி பி.ஆர்.நடராஜன் சந்தித்தபோது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கோவை விருந்தினர் மாளிகையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை சந்தித்து தொற்று பரவல் தடுப்பு குறித்து கோரிக்கையை முன்வைத்தார்.

இதனையடுத்து பி.ஆர்.நடராஜன் எம்பி கூறுகையில், 'தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கோவை மாவட்டத்தில் மிக அதிகமாக உள்ளது. நாள் ஒன்றிற்கு ஐயாயிரம் எண்ணிக்கை உயர்ந்து வருவது கவலையளிப்பதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, மாநகராட்சி உள்ளிட்ட அமைப்புகள் தீவிரமான தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் அதிகப்படியாக வரவழைக்க வேண்டும்.  தனியார் மருத்துவமனைகளிலும ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ள மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருகிற நிலை உள்ளது.

இது தொற்று பரவலை அதிகப்படுத்தவே செய்யும். ஆகவே இதுபோன்ற தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் வெளியே வராமல் தடுத்து கண்காணிக்கவும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய உதவிடவும் கூடுதல் சுகாதாரப்பணியாளர்களை நியமித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் நெருக்கம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தூய்மைப்பணியாளர்களை கொண்டு கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட சுகாதார பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசியை வரவழைக்கப்பட்டு உடனுக்குடன் அதனை பொதுமக்களுக்கு செலுத்துவதை உறுதிப்படுத்தப்படுத்த வேண்டும்' என்றார்.

Tags:    

Similar News