கொரோனா காலத்தில் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரிப்பு: கோவை எஸ்.பி

கொரோனா காலத்தில் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக, கோவை எஸ்.பி செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-22 08:30 GMT

எஸ்.பி. செல்வநாகரத்தினம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாக ரத்தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது:

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தடுப்பது குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குழந்தை திருமணம், முகம் தெரியாத நபர்களால் நடைபெறும் வன்கொடுமைகள், நெருங்கிய நபர்களால் நடைபெறும் குற்றங்கள் என குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மூன்று வகையாக பிரித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக பதிவான வழக்குகளில், முகம் தெரியாத நபர்களால் நடைபெற்ற குற்றங்கள் என 73 வழக்குகளும், குழந்தை திருமண வழக்குகள் 50, முகம் தெரிந்த நபர்களால் நடைபெறும் குற்றங்கள் என 32 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம், துடியலூர், காரமடை ஆகிய பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டில் மட்டுமே 100 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் போட சட்டத்தில் இடமுள்ளது. எனவே, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 5 நபர்கள் மீது குண்டர் சட்டம் பதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்தில் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி நிர்வாகங்களிடம் பேசி வருகிறோம். ஆன்லைன் வகுப்பில் குறிப்பிட்ட நேம் விழிப்புணர்வுக்காக ஒதுக்க வேண்டும். காவல்துறையின் இந்த முயற்சிக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News