கோவையில் இளைஞர் உயிரை காவு வாங்கிய புதிய மேம்பாலம்: திறப்பு விழா மறுநாளில் வாகன விபத்து..!

கோவையில், புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சுவரில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-06-13 07:34 GMT

கோவை-திருச்சி சாலையில் புதிய மேம்பாலத்தில் வேகமாக டூவீலரில் சென்ற வாலிபர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

கோவை ராமநாதபுரம் நாகப்பன் வீதியைச் சேர்ந்தவர் இளைஞர் பிரசாத். இவரும், புளியகுளம் பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் உதயகுமாரும் இருசக்கர வாகனத்தில் கோவை - திருச்சி சாலையில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சுங்கம் பகுதியில் உள்ள மேம்பால வளைவில் திரும்பும் போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது.

அப்போது நிலை தடுமாறி விழுந்த பிரசாந்த், உதயகுமார் ஆகிய இருவரும் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் வாகனத்துடன் மோதினர். இந்த விபத்தில் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உதயகுமார் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலம் திறக்கப்பட்ட இரண்டாவது நாளில் இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்திருப்பதும், ராசியில்லாத மேம்பாலம் எனவும், பாலம் ஒரு உயிரை காவு வாங்கி விட்டதாகவும் அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி கொண்டனர். எது, எப்படியோ புதிய பாலத்தில் இளைஞர், வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றது தான் உயிரிழப்புக்கு காரணம் என்பதே காவல்துறை தரப்பில் கூறும் உண்மை!

Tags:    

Similar News