பெட்ரோல் டீசல் விலை உயர்வு:பிரதமர் மோடி படத்திற்கு மலர்தூவி போராடிய 30 பேர்கைது
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மக்களின் வேதனையை வெளிப்படுத்தும் விதமாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது;
கோவையில் பிரதமர் மோடியைக்கண்டித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட தபெதிகவினர்.
பெட்ரோல் ,டீசல் விலை 100 ரூபாயை கடந்து செல்லும் நிலையில், கோவையில் பெட்ரோல் பங்குகளில் உலகிலேயே அதிக விலைக்கு உயர்த்தி சாதனை புரிந்த பிரதமர் மோடி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர்.
இந்த போராட்ட அறிவிப்பு காரணமாக, கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனை அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் இருந்த பிரதமர் மோடி படம் அகற்றப்பட்டது. எனினும் பிரதமர் மோடியின் புகைபடத்துடன் வந்த தபெதிகவினர் பெட்ரோல் பங்க் முன்பாக பிரதமர் மோடி படத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்திய தபெதிகவினர் பிரதமர் மோடியின் புகைபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர் தபெதிக அமைப்பின் பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் அளித்த பேட்டி: பெட்ரோல்,டீசல் அதிக விலைக்கு விற்கபடுவதால் மக்கள் படும் வேதனையை உணர்த்த பிரதமரின் புகைபடத்திற்கு மலர் தூவி மரியாதை செய்ததாகவும், பெட்ரோல் விலையை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மக்களுக்கு ஏற்படும் வேதனையை வெளிப்படுதும் விதமாக இந்த போராட்டம் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.