கோவையில் கூட்டணி கட்சிக்கு வார்டு ஒதுக்கியதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல் போராட்டம்

திமுக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-03 12:00 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்.

கோவை மாநகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கட்சிக்கு உக்கடம் பகுதியில் உள்ள 84வது வார்டு ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த தொகுதியில் திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், நேரடியாக போட்டியிடாமல் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக திமுகவினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இன்று சுங்கம்-உக்கடம் புறவழிச்சாலையில் அப்பகுதி மகளிர் திமுகவினர் உட்பட திமுகவினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அச்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு நெரிசல் ஏற்பட்டது. அப்போது பேசிய கட்சி நிர்வாகி அபுதாஹிர், இத்தொகுதியில் கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போது கணிசமான வாக்குகளை திமுக பெற்றுள்ளதாகவும், கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று வரும் நிலையில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவது சரியல்ல எனவும் தெரிவித்தார். மேலும் கட்சியின் மூத்த நிர்வாகியான சேக் அப்துல்லாவிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய போதும் கலைந்து செல்லாததால், 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News